அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு தொடக்க விழா - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மரியாதை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சியின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக வை எம்ஜிஆர் தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 47-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். மேலும், அதிமுக கட்சிக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து, மரணமடைந்த அதிமுகவினரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இன்று மாலை பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேச உள்ளனர்.
Next Story