பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : தலைவர்கள் மரியாதை

பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : தலைவர்கள் மரியாதை
x
சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் மரியாதை:



சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் கட்சியின் முன்னணியினர் பெரியார் சிலை முன்வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் சிலைக்கு அழகிரி மரியாதை :



மதுரை அவுட்போஸ்ட் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, திராவிடர் கழகம், தி.மு.க., அ.தி.மு.க, தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மதுரையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். 

பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை:



பெரியாரின் 140-வது பிறந்தநாளை யொட்டி, திண்டினம் தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர்  திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை

பெரியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.




Next Story

மேலும் செய்திகள்