விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரும் இதில் சிக்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதைப் பொருள் விவகாரம் - தீபிகா படுகோன் மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்பு  பிரிவு சம்மன்
x
நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட்டின் பல பகீர் பக்கங்களை  அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது… சுஷாந்த் தற்கொலை தொடர்பான விசாரணைகளின் போது தான் அவரது காதலியான ரியா சக்ரபோர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் கர்நாடக நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 
இதைத் தொடர்ந்து ரியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது  , பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகைகள், நடிகர்கள் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் வெளியிட்ட பட்டியல் எல்லாமே இன்டஸ்ட்ரியில் பிரபலமானவர்கள் என்பது தான் அதிர்ச்சி… 
இந்த வரிசையில் சிக்கியவர் நமக்கெல்லாம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். 

இவரைத் தொடர்ந்து நடிகர் சயீப் அலிகானின் மகளான சாரா அலிகான் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டது. அதேபோல் இந்தியில் பிரபல நடிகையான ஷ்ரத்தா கபூரும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என்றம் கூறப்படுகிறது. 

இதுதொடர்பான விசாரணைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த போது தான் அடுத்த பகீர் தகவல் வெளியானது. 

நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் இப்போது இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். தீபிகாவின் படங்களை நிர்வகித்து வரும் இவர், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததற்கான வாட்ஸ் அப் உரையாடல்களும் சிக்கியிருக்கின்றன. இதை ஆதாரமாக வைத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கரிஷ்மா பிரகாஷ்க்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர். மேலும் தீபிகாவுடன் சங்கேதமான பாஷையில் கரிஷ்மா உரையாடியதாக ஆதாரமும் வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில் மால், ஹாஷ் இருக்கிறதா? என்றும் கேள்விகள் இருக்கிறது. கஞ்சா வேண்டாம்.. எத்தனை மணிக்கு அதை கொண்டு வந்து தருவீர்கள்? என்பது உள்ளிட்ட வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று சுற்றி வருகிறது. அதுவும் இந்த உரையாடல் 2017ல் நடந்தது என்ற விபரமும் கசிந்துள்ளது. அப்படி என்றால் பல வருடங்களாக போதைப் பொருள் புழக்கம் பாலிவுட்டில் பரவிக்கிடந்திருக்கிறது என்பதை தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

இதில் D என குறிப்பிடப்பட்டிருப்பது யார்? K என்ற பெயருடையவர் யார்? என விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் பாலிவுட் பரபரத்து கிடக்கும் நிலையில் ட்விட்டரில் தீபிகாவை வம்புக்கு இழுத்துள்ளார் கங்கனா ரணாவத். போதைப்பொருள் பயன்படுத்துவோர் மன அழுத்தத்தில் தான் இருப்பார்கள் என்றும் அவர்கள் தங்கள் மேனேஜர்களிடம் பொருள் இருக்கிறதா? என கேட்பார்கள்" எனவும் நேரடியாகவே சீண்டியிருக்கிறார் கங்கணா.  கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போது சுஷாந்த் மரணம் வேறொரு புயலை கிளப்பி அதில் பலரையும் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்