காளையார் கோவில் அருகே உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் கைதிகளுக்கு தரவேண்டிய சம்பள பணத்தை கையாடல் செய்த புகாரில் காவலர் அலெக்ஸ் பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள காளையார்கோவில் திறந்தவெளி சிறையில், நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக தினமும் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தணிக்கை ஆய்வில், விடுதலையாகி சென்ற கைதிகளுக்கு சம்பளம் வழங்காதது தெரியவந்தது. இது குறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரித்த போது, சம்பளம் வழங்கும் பணியை கவனித்த காவலர் அலெக்ஸ் பாண்டியன் 2 லட்சம் ரூபாய் வரை கைதிகளுக்கு தராமல் தன் தேவைகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.