ஊட்டியில் வெளுத்து வாங்கும் கனமழை - 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
உதகையில் மரம் முறிந்து விழுந்ததால், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எப்பநாடு, தேனாடுகம்பை, அணிக்கொரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலையோரம் இருந்த மரம் மின் கம்பிகளின் மேல் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் மரத்தை பாதுகாப்பாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .
தற்போது நகராட்சி அலுவலகத்தில் இருந்து உயரமான வாகனம் வந்துள்ளதால் தீயணைப்பு துறை வீரர்கள் அந்த வாகனத்தில் ஏறி மேல் பகுதியை வெட்டி வருகின்றனர் .
முச்சந்திப்பு சாலையில் மரம் ஆபத்தான முறையில் விழுந்துள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், அதே போல் எப்பநாடு, அணிக்கொரை கிராமத்தில் இருந்து உதகையை நோக்கி வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.