மின் கட்டணத்தை வைத்து ..ஆன்ட்ராய்டு ஆப் மூலம் பணம் சுருட்டும் மோசடி கும்பல் - சைபர் கிரைம் விசாரணை

Update: 2022-10-01 06:58 GMT

மதுரையில் மின் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, முதியவரிடம் செல்போனில் பேசி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை புதூரை சேர்ந்த வீரலட்சுமணன் என்ற முதியவர் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மின்வாரிய ஊழியர் எனக்கூறி, தன்னை போனில் தொடர்பு கொண்ட நபர், மின் கட்டணத்தை உடனே கட்டாவிட்டால், மின் இணைப்பை துண்டிக்கப் போவதாகக் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் கூறிய ஆண்ட்ராய்டு ஆப்-ஐ டவுன்லோடு செய்த‌தும், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார வாரியம், எல்ஐசி போன்ற நிறுவனங்கள், பணம் கட்டுமாறு யாரையும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்ற போலீசார், அந்த‌ந்த நிறுவனங்களின் இணையதளத்தில் மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

இது போன்று நடந்தால், உடனே 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கியில் இருந்து பேசுவதாக‌க் கூறி மோசடி செய்த கும்பல், தற்போது மின் வாரிய ஊழியர் போன்று தொடர்பு கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்