விசா முறைகேடு வழக்கு விசாரணை : "ஜூலை 12 வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார்"

Update: 2022-06-24 20:22 GMT

விசா முறைகேடு வழக்கில் ஜூலை 12 வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதியளித்துள்ளது.

விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு முன் நடைபெற்றது.

முன்ஜாமின் மனுவை இறுதியாக விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்ற உறுதியை அமலாக்கத் துறை அளிக்குமா அல்லது கைது செய்ய தடை விதிக்கப்படுமா என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி ராஜுவிடம் நீதிபதி வினவினார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என உறுதியளித்தார். மேலும் இரு தரப்பும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன், அது வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்று அமலாக்கத் துறை அளித்த உறுதியையும் பதிவு செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்