பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் ! - 10 மணி நேரத்தில் கொலையாளி கைது | #ThanthiTv
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் 10 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.;
பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கணேசன்- வளர்மதி தம்பதியினர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், நேற்று வளர்மதி தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்தோடு போலீசார், 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காலிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர் பெயர் ராஜா என்கிற நிக்கோலஸ் என்பதும், அவர் வளர்மதி வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வளர்மதியிடம், 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து, நகைகளை பறித்துக்கொண்டு ஓடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நிக்கோலஸிடம் இருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.