ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை; முன்விரோதம் காரணமாக கொலை - மயிலாடுதுறை போலீசார் விசாரணை
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.;
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான இவர், சீனிவாசபுரம் பகுதியில் தீபாவளியன்று, நண்பர்கள் உடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சதீஷை கத்தியுடன் விரட்டியுள்ளனர். தப்பித்து ஓடும்போது விரட்டிச்சென்று குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சதீஷின் அண்ணன் வினோத் என்பவர், பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதனால், சில மாதங்களாக இருதரப்பினரிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக சதீஷ் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே குற்றவாளியை கைது செய்யக்கோரி, சதீஷின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பழனிவேல் மற்றும் அவரது உறவினரை காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.