சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2020-08-10 16:24 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனாவால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பால்துரையின் இறப்பிற்கான காரணம் குறித்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் பத்மநாபன், நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து 5 பேர் கொண்ட மருத்துவ குழு பிரேத பரிசோதனை நடத்தியது. இதனிடையே, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதை ஏற்று உடலை மதுரையில் தகனம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து உடலானது தத்தனேரி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் சாத்தான்குளம் டிஸ்பி சங்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்