கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2020-06-01 03:28 GMT
சென்னை போரூர் மேம்பாலத்தின் கீழே  ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு அப்பகுதி மக்கள் தான் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் 15 வருடங்களாக அங்கு பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொரோனாவால் உயிரிழந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது. 15 வருடங்களாக அங்கு பிச்சை எடுத்து வசித்தவர் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதி மக்கள்,  அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு எடுத்தனர்.



போலீசாரின் அனுமதியோடு அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து பிச்சைக்காரரின் சடலத்திற்கு மாலை அணிவித்து, பாடையில் வைத்து ஊர்வலமாக சுமந்து சென்றனர். போரூர் மின் மயானத்தில் அவரின் உடலை பொதுமக்கள் தகனம் செய்தனர்.


கொரோனா அச்சம் காரணமாக, குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே, அஞ்சி ஓடும் இந்த சூழ்நிலையில், தங்கள் பகுதியில் பிச்சை எடுத்த பிச்சைக்காரரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த இப்பகுதி மக்களின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்