2009 ஆம் ஆண்டு - ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்த வழக்கு : நேரில் ஆஜராகி ப.சிதம்பரம் சாட்சியம்

தேர்தல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

Update: 2020-03-04 20:09 GMT
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை, கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு  நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார். அப்போது,  அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு சென்றது குறித்தும், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும்  ராஜகண்ணப்பன் தரப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து, குறுக்கு விசாரணை முடிவடையாததால்,  விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா தள்ளி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்