ஹெல்மெட் - 69 லட்சம் பேர் மீது வழக்கு : உயர்நீதிமன்றத்தில் அரசு - காவல்துறை அறிக்கை

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-03 18:14 GMT
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவரது பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க கோரியும்,நான்கு சக்கர வாகன ஓட்டிகள்சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க கோரியும் சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி  அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து துறை முதன்மை செயலர் ஜவஹர் மற்றும் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ. ஜி. சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை வரும் மார்ச் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.தமிழகம் முழுவதும்  2018 நவம்பர் முதல் 2019 நவம்பர்  வரையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர்  மீதும்,நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 382 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 291 பேர் மீதும், வாகனம் ஓட்டும்போது செல்போனை உபயோகித்ததாக 4 லட்சத்து 63 ஆயிரத்து 543 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் இடம் பெற்றுள்ளது.போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றபட்டு வருவதால், 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது, சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38 சதவீதம் குறைந்து உள்ளதாகவும், அதனை இந்தாண்டு 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்