TNPSC-யை தொடர்ந்து சீருடைப் பணியாளர்கள் தேர்வில் முறைகேடு
சீருடை பணியாளர்கள் தேர்வில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டர்கள், தீயணைப்பு வீரர்கள் என எட்டாயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2 ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 763 பேரும் தேர்வானதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், முறைகேடு செய்து தேர்வானவர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடற்றி வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.