11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-04 10:46 GMT
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சபாநாயகர் தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அப்போது, இந்த வழக்கில் சட்டப்பேரவை தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, 3 ஆண்டுகள் கால தாமதம் என்பது தேவையற்றது என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, தகுதி நீக்க நோட்டீஸ் மீது ஏன் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கக் கூடாது?, பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்?  என்ற கேள்விகளை முன்வைத்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயணன் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்