இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பலி
ஒசூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவியை கிறிஸ்துபாளையம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். பஜ்ஜேப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடிய ஜார்ஜ்யின் உறவினர்கள் சடலத்தை எடுக்கவிடாமல் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.