உடல் எடை குறைப்பு நிறுவனத்தில் சோதனை : ஆவணங்கள், இயந்திரங்கள் பறிமுதல் என தகவல்

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இயங்கி வரும் பிரபல உடல் எடை குறைப்பு மற்றும் அழகு குறிப்புகள் தொடர்பான ஆலோசனை தரும் நிறுவனத்தின் அலுவலக கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-01 10:33 GMT
ஆந்திராவின் செகந்திராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல உடல் எடை குறைப்பு மற்றும் அழகு குறிப்புகள் ஆலோசனை தரும் நிறுவனம். அதன் இயக்குநர் தேவுலா விஜய் கிருஷ்ணாவின் வீடு உள்பட நாடு முழுவதும் மொத்தம் 49 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.  வாடிக்கையாளர்களிடம் லட்சக் கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 லட்சம் வாடிக்கையாளர்கள் கொண்ட உடல் எடை குறைப்பு நிறுவனத்தில் ஆயிரத்து 500 உணவு மற்றும் சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இயந்திரங்கள், முக்கிய ஆவணங்கள், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பிற நிறுவனங்களின் பண பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில், முழு விவரங்களும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம், விஜயவாடா நீதிமன்றம், நடிகை ராசி, ரம்பா ஆகியோரின் புகைப்படத்தை காட்டி தவறான விளம்பரம் செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்