தமது கேள்விகளுக்கான உண்மைகளை வெளியிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் - ஸ்டாலின்
தமது கேள்விகளுக்கான உண்மைகளை வெளியிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு குறித்து இரு நாளில் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவும், வெறுங்கையுடன் திரும்பிய வெறுப்பில், 'பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை' கூறுவது போன்று உள்ளதாக சாடியுள்ளார்.
13 நாள் சுற்றுப் பயணம் முடித்து திரும்பிய முதலமைச்சருக்கு, அரசு நிதியில் விளம்பரம் செய்தது, நிதி ஒழுங்கீனம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும், முதலீடுகளும், திமுக ஆட்சியில் கிடைத்தவை என்பதை முதலமைச்சர் மறந்துவிட்டதாக கூறியுள்ள ஸ்டாலின்,
முதலீட்டுக்கு தகுந்த இடம் தமிழகம் என்பதால், மாநாடு, விளம்பர மேளா இன்றி திமுக ஆட்சியில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் நிறுவனங்கள் அணிவகுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கியா நிறுவனத்தை கேட்டால் பல ரகசியங்கள் தெரியவரும் என கூறியுள்ள ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை கோரியுள்ளார்.
அவ்வாறு வெளியிட்டால், ஒரு வாரத்தில் திமுக சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளதாக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.