ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக வழக்கு : தீபா, தீபக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மைதானா என நேரில் ஆஜராகி விளக்கமளிக்க , அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2019-08-27 18:40 GMT
மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சொத்துகளை பராமரிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஜெயலலிதா இறந்த பிறகு அவரது போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.

1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியில் ஜெயலலிதா பெற்ற 2 கோடி ரூபாய், தற்போது வட்டியுடன் 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அவரது வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாகவும்  வருமானவரித்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது . இதற்காக ஜெயலலிதாவின்  போயஸ் தோட்ட இல்லத்தை முடக்கியிருப்பதாகவும், ஆள் பற்றாகுறை காரணமாக போயஸ் தோட்ட இல்லத்தை அளவிடும் பணியை  அண்ணா பல்கலைகழகத்திடம் ஒப்படைக்கலாம் என்றும்  வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி கொள்ளுங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  ஜெயலலிதா சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது  உண்மை தானா என கண்டறிய அவரது உறவினர்கள்  தீபா மற்றும் தீபக் இருவரும்  வரும் 30ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்