வெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு

பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2018-10-22 10:34 GMT
கடந்த 2014 ஆம் ஆண்டில், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, 371 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் வரை, 3 ஆயிரத்து 907 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளைப் போலவே, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் - 8 ஆயிரத்து 462, டில்லி - ஆயிரத்து 495, அரியானா - 908, ராஜஸ்தான் - 647, பீகார் - 555, மகாராஷ்டிரா -448 மற்றும் மத்திய பிரதேசத்தில் 409 வழக்குகள், 2018ம் ஆண்டில் மட்டும்  பதிவாகியுள்ளன.அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளில், தென் மாநிலங்களில், கர்நாடகத்தில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வரை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு சில பெண்கள் மட்டுமே புகார் செய்தனர். ஆனால், 2018ம் ஆண்டில், புகார்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாலியல் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் குறைப்பு சட்டம் -2013'யை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது. மேலும், அலுவலகங்களில் புகார் பெட்டி வைப்பது, மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பது என, பணிபுரியும் பெண்களுக்கு உதவிட, மத்திய அமைச்சகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, மீடூ இயக்கம், தீவிரமாகி வருகிறது. அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த இயக்கம்,இந்தியாவிலும் பிரபலமாகி வருவதால், பல பாலியல் தொந்தரவுகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. 



Tags:    

மேலும் செய்திகள்