என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் மருமகள் கைது

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாததால் என்.டி.திவாரி மகனை, அவரின் மனைவியே தலையணையால் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-04-25 05:49 GMT
உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்தவர் மறைந்த என்.டி.திவாரி. இவரது 40 வயதான மகன் ரோகித் சேகர், கடந்த வாரம் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணையை பல்வேறு கோணங்களில் முடுக்கி விட்டனர். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா மனைவி அபூர்வா மீது சந்தேகம் வரவே அவரிடம், போலீசார் 3 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். தலையணையால் அமுக்கி கணவர் ரோகித் சேகரை கொலை செய்ததை அபூர்வா ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையாதது தான் கொலை செய்ய காரணம் என அபூர்வா விசாரணையில் கூறியதாகவும், தடய அறிவியல் அறிக்கை அடிப்படையில் விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே அபூர்வா தான் கொலை செய்திருக்க முடியும் என்று முடிவுக்கு வந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தனது தந்தை என்.டி. திவாரி தான் என நீதிமன்றத்தில் பல ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற ரோகித் சேகர், மனைவியால் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்