காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவும் 25 ஆயிரம் கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கபினி அணையின் நீர்மட்ட அளவு 2 ஆயிரத்து 282 புள்ளி 52 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 284 அடி என்பது குறிப்பிடத்தக்கது.