நடை பாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?
ஜூலை 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு;
நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை ரத்து செய்யக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜரானார்.
* அப்போது நீதிபதிகள், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியில் நடைபாதை வியாபாரிகளை எப்படி அனுமதித்தீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
* அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
* அவர்களுக்கு மாற்று இடம் எங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர்களை அப்புறப்படுத்தாமல், ஏன் ஒழுங்குபடுத்த கூடாது எனவும் நீதிபதிகள் கேட்டனர்.
* அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார் .
* நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கடந்த 2 ஆண்டுகளாக அரசு தரப்பில் கூறப்பட்டு வருவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஜூலை 20 ந்தேதிக்குள், பதிலளிக்கவும்,
ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.