"தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி நியமனம்"

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Update: 2020-02-05 21:25 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரியாக சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சங்க தலைவர் விஷால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி அதிகாரி நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அதிகாரி பதவி காலம்  முடிவடைவதாலும், அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதாலும், அடுத்த ஓராண்டுக்கு புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐ.ஜி. மஞ்சுளாவை நியமித்து, ஜனவரி 2ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்திருப்பது சட்ட விரோதம் என்றும், தயாரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என விஷால் தரப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்