முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் காலமானார் - சிலுவம்பாளையத்தில் உடல் தகனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள், சேலம் அருகே சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.
x
முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள், நள்ளிரவில் காலமானார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவசாயி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெற்றது. வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நடந்து சென்றனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் மயானத்துக்கு ​இறுதி ஊர்வலம் சென்றடைந்ததும், அங்கு தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. தவுசாயி அம்மாள் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் மறைவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துக் கொண்டார். முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை முதல்வர் பேசினார். அப்போது முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இதனிடையே இன்று மதியம் சாலை வழியாக சேலம் செல்லும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

முதல்வரின் தாயார் மறைவுக்கு தமிழிசை இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றும், அவரை இழந்து வாடும் தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

"தாயை "இழந்து வாடும் முதல்வருக்கு ஆறுதல்" - திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், முதலமைச்சரின் தாயார் இறந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாக குறிப்பிட்டு உள்ளார். தவுசாயி அம்மாளை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்