குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது
குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், குழந்தைகளின் ஆபாச காட்சிகளை பகிர்ந்ததாக முத்துப் பாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்ற ஏ.சி. மெக்கானிக், பேஸ்புக் சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததால் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை இன்று காலை 5 மணிக்கு போலீசார் கைது செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் 67ஏ, 67பி, போக்சோ சட்டம் 13, 14, 15 ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், அவரை திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் ஆபாச வீடியோக்களை, இணையதளத்தில் பகிர்ந்த செயலுக்காக செய்யப்பட்ட முதல் கைது இது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக தமிழகத்தில் முதல் கைது - முன்னாள் காவல் அதிகாரி கருத்து
Next Story