"சமூக வலைதளங்களை கண்காணிக்க விரைவில் புதிய சட்டம்"

சமூக வலைதளங்களை கண்காணிக்க, புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் தங்கள் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், சமூக வலைத்தளங்களில், பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அமைப்பு இருப்பதை போல, சமூக வலைதளங்களை கட்டுபடுத்த எந்த அமைப்பு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், தற்போது அது அரசின் இறுதி முடிவிற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல, வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்