ராஜகோபால் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவர் தரப்பில் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜகோபால் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
x
* சரவண பவன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த உதவி மேலாளர் மகள் ஜீவஜோதி. ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஜீவஜோதியை திருமணம் செய்ய விரும்பினார் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து வந்த நிலையில், அவரையே திருமணமும் செய்து கொண்டார். 

* ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் செல்வம் கொழிக்கும் என்ற ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ராஜகோபால், எப்படியும் அவரை அடைய திட்டமிட்டார். இதையடுத்து சாந்தகுமாரை அழைத்து பல முறை மிரட்டிய அவர், இறுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி அவரை கடத்தினார். 

* கணவரை காணவில்லை என கூறி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜீவஜோதி, அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்திச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கைப்பற்றப்பட்டது

* இதுதொடர்பாக ராஜகோபால், அவரது ஓட்டலில் வேலை பார்த்த ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது.

* வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். இதனை எதிர்த்து ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. 

* ஜாமீனில் வெளியே வந்த ராஜகோபால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அளித்த, ஆயுள் தண்டனையை, உறுதி செய்து கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு  நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலையோடு ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறப்பட்டது.

* நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத அளவிற்கு ராஜகோபாலின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது தண்டனை காலத்தை மருத்துவமனையில் கழிக்க அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

* இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது, உச்சநீதிமன்றம்.





Next Story

மேலும் செய்திகள்