பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்

பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து காதலிக்குமாறு 5 இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
பொள்ளாச்சியில் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ வெளியான சம்பவம் இன்னும் பலர் மனதில் நீங்காமல் உள்ளது. அந்த வடு ஆறுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அதே பொள்ளாச்சியில் அரங்கேறி யிருக்கிறது. பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முகமது சபீர். இவர் தமது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி, காதலித்து செல்ஃபோன்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது...

ஆபாச புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் STATUS ஆகவும், முகநூலிலும் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த மாணவியின் உறவினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். இது குறித்து சபிரிடம் கேட்க சென்றதற்கு, மாணவியின் உறவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது சபீர் மற்றும் அவரது நண்பர்கள் முகமது ரியாசுதீன், வசந்தகுமார், முகமது யூசுப் , கமர்தீன், ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செல்போன்களில் மாணவிகளுடன் ஆபாசமாக எடுத்த மேலும் பல புகைப்படங்கள்  இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சபீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரும் பொள்ளாச்சி மற்றும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

பொள்ளாச்சி சம்பவம் நிகழ்ந்து பல எதிர்ப்புகள் கிளம்பியும் அதே பகுதியில் பெண்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்