பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண் இடைத்தரகரை மிரட்டி நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகே ஒரு பெண், 3 இளைஞர்களிடம் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதால், அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதப்படை காவலர்கள் மோகன் மற்றும் சார்லஸ் வேளாங்கண்ணி என்பது விசாரணையில் தெரிய வந்தது. மற்றொருவர் இவர்களது நண்பர் ராஜசேகரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழில் இடைத்தரகர்  ஒருவரை தொடர்பு கொண்ட இவர்கள், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர். அதன் பிறகு, பெண் இடைத்தரகர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

இரண்டு மாதங்கள் கழித்து அந்த செல்போன் நம்பர் மீண்டும் ஆன் செய்யப்பட்டதையடுத்து அதன் முகவரியை கண்டுபிடித்து அந்த பெண் இடைத்தரகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். போலீஸ்காரர்களை ஏமாற்றுகிறாயா என கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளை அவர்கள் பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை பூந்தமல்லியில் பார்த்த அந்த பெண், பொதுமக்கள் உதவியோடு பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வேட்கைக்காக ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பெண்ணை மிரட்டி நகைகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்