வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...

தமிழக சுற்றுலாத் தலங்களின் இன்றைய நிலைமை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
x
செல்லும் இடங்களில் எல்லாம் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், சுற்றுலா தலங்களை மதுபான விடுதிகளாக்கும் மனப்பான்மை, காலத்தால் அழியாத கலைப் பொக்கிஷங்கள் மீது கரிக்கோடுகள்... தமிழக சுற்றுலாத் தலங்களின் இன்றைய நிலைமை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

கோடை விடுமுறையை கொண்டாடவும், கொளுத்தும் கோடை வெப்பத்திலிருந்து ஒரு சில நாட்கள் விடுபடவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கின்றனர் மக்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை என தங்கள் வசதிக்கு  ஏற்ப குளுகுளு பிரதேசங்களுக்கு  பயணப்படுகின்றனர். ஆன்மிகப் பயணமாக செல்பவர்கள் பாபநாசம், சதுரகிரி என வெப்பம் குறைவான இடங்களுக்கு செல்வதை  விரும்புகின்றனர். இளைஞர்கள் சாகச சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால் சுற்றுலா இன்பத்தை அனுபவிக்கச் செல்லும் எல்லோருமே செல்லும் இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக உள்ளது.  பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதி, மலைப்பகுதி என சுற்றுலா தலங்களில் கண்ணில், கண்ட இடங்களில் எல்லாம் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். வனப்பகுதியில்  மதுபானம் அருந்தும் இளைஞர்கள் கூட்டம் காலி மதுபான பாட்டில்களை ஆங்காங்கே வீசும் நிலையில்,  ஒரு சிலர் பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். சாலையோரங்களில் காரை நிறுத்தி உணவருந்தும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.  ஒகேனக்கல், திற்பரப்பு, பாபநாசம் என நீர்நிலைப் பகுதிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்பவர்கள் தங்களது ஆடைகளை அங்கேயே விட்டு செல்வதால், அந்த இடங்கள் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

அங்கு உணவை தேடி வரும் வன உயிரினங்கள், உணவுடன் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால்  அவைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. புராதான கலைச் சின்னங்களை  பாதுகாக்க வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தாலும், அதை சிலர் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.  எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், காதலர்கள், நண்பர்கள் என்ற போர்வையில் பெயர்களை கிறுக்குவது, கரிக்கோடுகளால் சித்திரங்களை வரைவது, எழுத்துகளை சிதைப்பது என வரம்பு மீறிய செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் அல்லது நாம் கண்டு கொள்ளாத தவறுகளால் சுற்றுலாத் தலங்களின் சுகாதாரமும், வன உயிர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக  மாறி வருகிறது.  சுற்றுலா செல்லும் இடங்களில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதன் மூலம் சுற்றுலா தலங்களின் அழகும் வளமும் குறைந்து கொண்டிருக்கிறது. இயற்கையை நேசிக்க, ரசிக்கச் செல்பவர்கள் அதற்கு கைமாறு அளிக்க வேண்டும் எனில் சுற்றுலா சென்ற இடத்தில் பொறுப்பாக நடந்து கொண்டாலே போதும் என்கின்றனர் சூழலியலாளர்கள். அந்த இடத்தின் சூழலைக்  கெடுக்காமல் ரசிப்பதுதான் பொறுப்பான சுற்றுலா  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்