தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...
தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இரட்டை இலை வழங்கப்பட்டதை எதிர்த்து தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர் இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படி கோரியிருந்தார். இதையடுத்து, அவருடைய கோரிக்கையை ஏற்று குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தரவை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை சின்னத்தை தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, கட்சி பதிவு செய்யப்படாததால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட விசாரணை இன்று நடைபெறுகிறது.
Next Story