முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...

காவிரி டெல்டா பகுதிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் முக்கொம்பு அணையை கட்டி எதிர்கால சந்ததியருக்கு நல்வாழ்வு காட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
x
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருந்தாலும், பழமையும்  பெருமையும் தேக்கி வைத்து நின்ற முக்கொம்பு பாலம் உடைந்தது மக்களை கவலைக்குள்ளாகியது... தண்ணீரை தேக்கி வைக்க கல்லணையை கரிகாலன் கட்டியது போல முக்கொம்பு அணைக்கு விதை போட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சர். ஆர்தர் தாமஸ் காட்டன்....பிரிட்டிஷ் காரர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் இருந்தபோது, 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டவர் தாமஸ் காட்டன்...1829ஆம் ஆண்டு காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக இவரை ஆங்கிலேய அரசு நியமித்தது. அப்போது கல்லணையின் கட்டுமானத்தையும், அதன் பயன்பாட்டையும் பார்த்து வியந்த காட்டன், கொள்ளிடத்தில் தடுப்பணையை கட்டினார். காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புவிற்கு வரும் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து, அதை மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. இதேபோல் கும்பகோணத்திற்கு அருகே அணைக்கரை என்ற இடத்தில் கீழணையை முழுமையாக கட்டியதும் இவரே. இதனால் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரானது வீராணம் ஏரிக்கு செல்வதால் பல்லாயிரக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் தஞ்சையில் வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்டவற்றிற்கான பாசனத் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தவர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு மேட்டூரில் அணையையும் அவரே கட்டி முடித்தார்... இதுபோல் தமிழகத்தின் பிரதான நீர் தேக்கங்களில் எல்லாம் நீர்பாசன திட்டத்துக்கு அடித்தளமிட்ட பெருமை காட்டனையே சாரும்...



இத்தகையை பல்வேறு பெருமைகளை செய்த ஆர்தர் தாமஸ் காட்டனின் பெருமையை நினைவு கூறும் வகையில், முக்கொம்பு அணையில் அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு வடிவம் கொடுத்த பென்னி குயிக்கிற்கு கிடைத்த பெருமை போல இவருக்கு கிடைக்கவில்லை என்பதும் வேதனையான ஒன்றாகவே மக்களால் பார்க்கப்படுகிறது... முக்கொம்பு அணையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் முத்தான வார்த்தை ஒன்றை பொறித்து வைத்திருக்கிறார் காட்டன்.  இந்த அணையை கட்டி முடிக்க அப்போதைய மதிப்பில் 2 லட்ச ரூபாய் செலவானது என்றும், இதன் பயன் என்ன என்பதை எதிர்கால தலைமுறை உணரும் போது தான் தெரியும் என முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார்...அவர் சொல்லிச் சென்ற அந்த வார்த்தையின் பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்... நீர் மேலாண்மை என்பதை அணைகளில் மட்டுமல்ல... நம் வீடுகளிலும் திறம்பட செய்வதே இவரைப் போன்றவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை...



Next Story

மேலும் செய்திகள்