அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில், சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அம்மன் கோயில்களில் களைகட்டும் ஆடித்திருவிழா
x
தரை மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில்  உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 8ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதிவரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்கவும், 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய அதிரடி சிறப்பு படையினர் முதன்முறையாக குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மஹாமாரியம்மன் ஆலயத்தில் மஹாயாகம்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஸ்ரீவினைதீர்க்கும் மஹாமாரியம்மன் ஆலயத்தில் நவசண்டி மஹாயாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பட்டுப்புடவை ஹோமம் ,வஸோத்தார ஹோமம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தருமபுரம் இளைய ஆதீனம்  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ஒசூர் சிப்காட் பகுதியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றுவருகிறது. நேற்று தாய்வீட்டு சீதனப் பொருட்களுடன் பூ கரகங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு பலவித பொருட்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது.  இதையடுத்து, கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியபடியும், அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடியும், சக்தி கரகம், அக்னி கரகம் போன்றவற்றை நேர்த்திக்கடனாக எடுத்துவந்தனர். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கோலாகலம்

ஆடி கடைவெள்ளியையொட்டி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அங்குள்ள மங்காளம்பிகையம்மன், துர்கையம்மன், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு நேரத்தில் 500 பெண்கள் குடும்ப நன்மைக்காக குத்து விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். 

பாதாளமாரியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பாதாளமாரியம்மன் கோயிலில் ஆடிமாத கடைவெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணியப்பட்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள பச்சைக்காளி, பவளக்காளிக்கு காய்கனிகளால் அலங்காரமும்,  மூலவர் பாதாள காளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயிலில் அமர்ந்து வளையலை அணிந்து கொண்டனர். 

முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா

தூத்துக்குடியில் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் 

ஆடிவெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் தவிட்டுமாரியம்மன் கோவிலில் 8 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் கருமாரியம்மனுக்கும், பேட்டை மகாமாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் குத்துவிளக்கில் தீபமேற்றி குங்குமத்தாலும், மலர்களாலும் அர்ச்சனை செய்து அம்மனை  வழிபட்டனர்.

பட்டுநெசவு செய்வதுபோல் அம்மனுக்கு அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டு நெசவு தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பட்டு கைத்தறி தொழில் நலிவடைந்த வருவதைத் தடுக்கவும், தொழில் மேம்பாடு அடையவும் வலியுறுத்தி, திருப்புவனம் தோப்புத்தெருவில் உள்ள செல்வமாரியம்மனுக்கு, பட்டு கைத்தறி நெசவு செய்யும் அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டனர்.

பிள்ளைத்தோட்ட ஆனந்த முத்துமாரியம்மன் தேர் திருவிழா 

புதுச்சேரி பிள்ளைத்தோட்ட ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் கோயில் ஆடி மாத பிரமோற்சவ விழாவையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்