உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் - 6 பேர் கொண்ட கும்பல் கைது
உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று, ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானாவில், எச்டிஎஃப்சி வங்கி நிர்வாகம், பாலப்பர்த்தி ரகுராம் என்பவர், 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை, கிரெடிட் கார்ட் மூலம் கடன் பெற்று ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
விசாரணையில், இவர்கள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம், தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து, விபத்தில் இறந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் விவரங்களை சேகரித்து, பின்னர் அது மூலம் போலி ஆவணங்களை தயார் செய்து, கடன் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் பணம் பெற்றது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 53 லட்சத்து 93 ஆயிரத்து 43 ரூபாய் பணம், ஒரு கார், போலி அடையாள அட்டைகள், 100 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story