வாங்கிய பணத்தை திருப்பித் தராததால் ஆத்திரம்.. மின்வாரிய ஊழியருக்கு நேர்ந்த பயங்கரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பணத் தகராறு காரணமாக மின்சார வாரிய ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த மின்வாரிய ஆய்வாளர் சேசுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் கடன் வாங்கிய பணத்திற்கான வட்டியைத் தராமல் ஐந்து ஆண்டுகளாக இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சேசுராஜ் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த வேளாங்கண்ணி அவரை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சேசுராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..