பெண்ணின் அனுமதி இன்றி கருக்கலைப்பு - மருத்துவமனை மீது புகார்
தனது மனைவியின் அனுமதியின்றி, மயக்க ஊசி செலுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக தனியார் மருத்துவமனை மீது இளம் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நாவலர் வீதியைச் சேர்ந்த 20 வயதான பெண் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த 41 வயதான வெங்கடாசலம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற மாமனார் சண்முகசுந்தரம் மற்றும் மாமியார் சங்கீதா தனியார் மருத்துவமனைக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்து பரிசோதனை செய்ய அழைத்துச் செல்வதாக கூறி, அங்கு மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக வெங்கடாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், தம்மை மிரட்டியதாக கூறி தனியார் மருத்துவமனை மருத்துவர் சரஸ்வதி காவல் நிலையத்தில் வெங்கடாசலம் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.