சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் : கொரோனா வைரஸ் பாதிப்பு - பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரமற்ற இறைச்சி மூலம் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. இது, பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால், வுஹான்
நகரில், பேருந்து, ரயில், விமானம் என சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்கி, 80 பேர் உயிரிழந்ததாகவும், 2 ஆயிரத்து 744-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.நோய் வேகமாக பரவி வருவதால் ஆயிரத்து 300 படுக்கை வசதி கொண்ட 2-வது சிறப்பு மருத்துவமனை அடுத்த 15 நாட்களில் கட்டி முடிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் இறைச்சி விற்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இதனிடையே, சீனா சென்று திரும்பிய ராஜஸ்தான், பீகாரைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.