காதலியின் தந்தையை கடத்த முயன்ற காதலன் - காதலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸ்

திண்டுக்கல் அருகே காதலியின் தந்தையை காதலனே கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பட பாணியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-01-23 11:03 GMT
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டேனியல் என்பவரின் மகள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரும், தனியார் ஸ்கேன் மையத்தில் பணியாற்றி வரும் தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த டேனியல், மகளை கண்டித்ததால், சுரேசுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் டேனியல் மற்றும் அவரது மகளுடன், சுரேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டேனியல் தனது சொந்த வேலை விஷயமாக திண்டுக்கல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள், காரில் துரத்திச் சென்று அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். மேலும் டேனியலை காரில் கடத்தவும் முயற்சி செய்துள்ளனர். சினிமா பட பாணியில் நிகழ்ந்த இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், டேனியலை மீட்டுள்ளனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், காரில் தப்பியோட முயன்ற சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், அருண்குமார், விஜய் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களின் காரும் பறிமுதல் செய்ப்பட்டது. தொடர்ந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்