பல் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள் : கலந்தாய்வுக்கு 700 பேர் கூட வரவில்லை என தகவல்
தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வெறிச்சோடியது.
தனியார் கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது மொத்தம் உள்ள 694 இடங்களுக்கு, கலந்தாய்வில் பங்கேற்க ஏழாயிரம் மாணவர்கள் அழைப்பு அனுப்பப்பட்டது. 700 மாணவர்கள் கூட கலந்தாய்வுக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கலந்தாய்வு நடைபெறும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் கல்லூரி பிரதிநிதிகள் கலந்தாய்வு இடத்திலேயே முகாமிட்டு மாணவர்களை தங்கள் கல்லூரிகளில் சேருமாறு வலியுறுத்தி வருகின்றனர். நாளையும் கலந்தாய்வில் பங்கேற் ஏழாயிரம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள், இதர கட்டணங்கள் சேர்த்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணம் 11 ஆயிரத்து 300 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால், மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.