காதல் விவகாரம் : நண்பனை கொலை செய்த சக நண்பன்...

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை அவரின் நண்பரான சக மாணவரே, கல்லூரி வாசலில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-27 07:35 GMT
சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், ஆந்திர மாநிலம் ஆனந்தபூரை சேர்ந்த சவன்குமார் மற்றும் ஹரிஹர சண்முகம் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தனர். ஹரிஹர சண்முகத்தின் தங்கை முறையான உறவுக்கார பெண்ணை சவன்குமார் காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த ஹரிஹர சண்முகம், தனது தங்கையை காதலிக்க கூடாது என சவன்குமாரை பலமுறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சவன்குமார், செல்போனில் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஹரிஹர சண்முகம் ஆத்திரம் அடைந்தார். கல்லூரிக்கு வந்த சவன்குமாரை, வாசலிலேயே நிறுத்தி, தனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம், தன்னிடம் இருந்த கத்தியால் சவன்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சவன்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த படுகொலையை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஹரிஹர சண்முகத்தை மடக்கி பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்துவந்த துரைப்பாக்கம் போலீசார், சவன்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் நண்பனையே கொலை செய்த மாணவர் ஹரிஹர சண்முகத்தை கைது செய்த போலீசார், விசாரணைக்கு அழைத்து சென்றனர். கல்லூரி வாசலிலேயே மாணவர் ஒருவரை சக மாணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

மேலும் செய்திகள்