பேராசிரியர்களின் அசல் சான்றிதழ் விவகாரம் : அண்ணா பல்கலை. உத்தரவுக்கு இடைக்கால தடை
தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் உத்தரவுக்கு தடைக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தால் கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறி விடக்கூடும் என்றும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நாட்டில் 9 ஆயிரத்து 60 போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக அறிக்கை வெளியாகியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, அண்ணா பல்கலைக் கழகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இது தொடர்பாக 2 வார காலத்திற்குள் அண்ணா பல்கலை பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.