பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் - உருவப்படத்திற்கு குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் மரியாதை...
பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப் பட்டுள்ளது. அவரது படத்திற்கு தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள் .
"அரசியல் பிரமுகர்கள் மரியாதை"
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், வைகோ, திருநாவுக்கரசர், தமிழிசை சவுந்தரராஜன், ஞானதேசிகன், திருமாவளவன், தங்கபாலு, சைதை துரைசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சீமான், ராசாத்தியம்மாள் எர்ணாவூர் நாராயணன், விஜிபி சந்தோஷம், விக்கிரமராஜா, உள்ளிட்டோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
"'தினத்தந்தி' அலுவலகங்களில் ஊழியர்கள் மலர் அஞ்சலி"
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தினத்தந்தி அலுவலகங்களிலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அலுவலகங்களில் தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எப்.எம் மற்றும் ஏ.எம்.என் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். இதுபோல, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் புதுச்சேரி என வெளிமாநிலங்களில் உள்ள அலுலகங்களிலும் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.