தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...

பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த வயதான தம்பதியர் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-05 07:52 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி- தனலட்சுமி தம்பதியினருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் அதே கிராமத்தில் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மகனும், மகளும் கவனிக்காதது ஒருபுறமிருக்க, என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்ததற்கு இழப்பீடும் இதுவரை வராததால், சாரங்கபாணி-தனலட்சுமி தம்பதியினர் வறுமையில் வாடி வருகின்றனர். பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த அவர்கள், தாங்கள் வசித்துவரும் வீட்டின் அருகே, சவக்குழி  தோண்டியுள்ளனர். பின்னர், உறவினர்களுக்கு போன் செய்த அவர்கள், கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் தோண்டிய குழியிலேயே தங்களது உடல்களை அடக்கம் செய்துவிடுமாறும் கூறியுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், விரைந்து சென்று அந்த தம்பதியினரிடமும்  மகனிடமும்  விசாரணை நடத்தினர்.ஆனாலும் அதில் இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை. தள்ளாத வயதில் பிள்ளைகள் கைவிட்ட விரக்தியில் வறுமையில் வாடிய தம்பதியினர், தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. 


Tags:    

மேலும் செய்திகள்