சென்னை வெள்ளம் - அதிகாரிகள் விளக்கம்
சென்னையில்,வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசிடம் கோரியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, சைதாப்பேட்டையில் அடையாறு கரையில் 13 மாடி கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கில், வருவாய் துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு, வருவாய் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணையர் சத்யகோபால் ஆஜராகினர்.
அப்போது, 2015ம் ஆண்டு வெள்ளம் போன்று, எதிர்காலத்தில் நடக்காதபடி தடுப்பதற்கு விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கோரியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை வெள்ளத்தின் போது, 859 பகுதிகள் மூழ்கியதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், 'வார்த்' புயலின் போது 50 இடங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 17 ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.