அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-11 14:47 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே தோனியை அரசியலில் இழுத்து போட பல்வேறு கட்சிகள் பல்வேறு காலமாக முயற்சித்து வருகின்றனர். இதற்கு தொடக்க புள்ளியே, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் தோனி அளித்த பேட்டி தான். விலைவாசி உயர்ந்ததன் காரணமாக பால் குடிப்பதையே நிறுத்திவிட்டேன் என்று நகைச்சுவையாகவும், வெளிப்படையாகவும் தோனி அரசை விமர்சித்தார்.

இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு தோனியின் சகோதரரான நரேந்திர தோனி பா.ஜ.க. வில் இணைந்தார். இதனால் தோனியும் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை வெற்றி, அந்நிய மண்ணில் தோல்வி, ராணுவ வீரர்களுடன் பயிற்சி என தோனியின் பயணம் சென்று கொண்டிருந்தது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் தோனியை அவரது இல்லத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் நிகழ்வு தான் அது  என்று பா.ஜ.க. தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதனால் தோனி பா.ஜ.க.வில் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது.

அதில் பெட்ரோல் பங்கில் தோனி அமர்ந்திருப்பது போல் இருந்ததால், தோனி அரசியலில் குதித்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் பலர் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தான், தோனி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று தெரியவந்தது. 

போராட்டத்திற்கு வலு சேர்க்கவே எதிர்க்கட்சிகள் இது போன்ற பதிவை உலவவிட்டதாக பா.ஜ.க. ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். தோனி அரசியலுக்கு வந்தாரா என விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் தான் தோனியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.  
Tags:    

மேலும் செய்திகள்