மத்திய அரசு - மம்தா அரசு இடையே வலுக்கும் மோதல் - தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.க்கு மீண்டும் மத்திய அரசு சம்மன்
மேற்கு வங்காள மாநில அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கெடு விதித்து மத்திய அரசு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து, இதுபற்றி விளக்கம் அளிக்க மேற்கு வங்காள மாநில அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர்களை அனுப்ப இயலாது என்று மாநில அரசு கூறிவிட்டது. மேலும், ஜெ.பி.நட்டாவின் பாதுகாப்புக்கு பொறுப்பான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய தொகுப்பு அனுப்பக் கோரியதையும் மம்தா அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில் மாநில அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கெடு விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கும், மம்தா அரசுக்கும் மோதல் மேலும் முற்றியுள்ளது. இதற்கிடையே கொரோனாவை காரணம் காட்டி காணொலி கூட்டத்திற்கு மம்தா அரசு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.