நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து.. "இது தான் காரணம்" - ரயில்வே அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2024-03-03 09:46 GMT

ஆந்திராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்துக்கு, ஓட்டுநர் மொபைலில் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில், ஹவுரா-சென்னை வழித்தடத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி இரவு ரயில் விபத்து ஏற்பட்டது. ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயில் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லோகோ பைலட் மற்றும் கோ பைலட், மொபைலில் கிரிக்கெட் போட்டி பார்த்ததால் கவனம் சிதறி விபத்து நேர்ந்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற கவனச்சிதறல்களை கண்டறிவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு, ஓட்டுநர் ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாகவும், அது மீண்டும் நடைபெறாமல் இருக்க தீர்வைக் கொண்டு வருவதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்