மேற்கு வங்காளத்தில் ஒரு மாம்பழத்தின் விலை ரூ.500 - ரூ.1,500...

ஒரே ஒரு மாம்பழத்தின் விலை, ஆயிரத்து 500 ரூபாய்... அதற்கு மேல் பணம் கொடுத்தாலும், கிடைக்காது... அந்த மாம்பழத்தின் பின்னணி தான் என்ன?

Update: 2018-06-30 10:15 GMT
இந்தியாவில், நவாப் மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசராக இருந்தவர் சிராஜ் உத் தவுலா. மேற்கு வங்கத்தின் கடைசி நவாப் மன்னராக இருந்த இவர், அரச பரம்பரையினர் சாப்பிடுவதற்காகவே, மாம்பழ ரகம் ஒன்றை உருவாக்கினார். மேற்கு வங்காளத்தின் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட "கோஹிதூர்" (Kohitur) என்று பெயரிடப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மாம்பழ ரகம், மிகவும் மென்மையானதாகும்.  முழுவதும் பழுத்த பழங்களை, கவனமுடன் மரத்தில் இருந்து கையால் பறித்து, அதனை பருத்தி அல்லது பருத்தி துணியால் சுற்றி வைக்க வேண்டும். இந்த மாம்பழம், மரத்தில் இருந்து விழுந்து விட்டாலோ அல்லது சரியாக கையாளவில்லை என்றாலோ அழுக தொடங்கி விடும்.

கோஹிதூர் மாம்பழங்களை உலோகங்களுக்கு பதிலாக, மூங்கிலால் செய்யப்பட்ட கத்திகளை பயன்படுத்தி நறுக்கினால், அதன் உண்மையான நறுமணமும் மற்றும் சுவையும் கிடைக்க பெறலாம். இதனை, தேனில் வைத்து, மன்னர் குடும்பத்தினர், அதிக நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மன்னராட்சி காலத்தில், இந்த மரங்களை பொதுமக்கள் வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது.  அரசர்களின் தோட்டங்களிலேயே வளர்க்கப்பட்டு அரச குடும்பத்தினர் மட்டுமே, சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது மூர்ஷிதாபாத்தில் 25 முதல் 30 கோஹிதூர் மரங்களே உள்ளன.  அவற்றில் சில மரங்கள் 150 வருடங்கள் பழமை வாய்ந்தவை ஆகும். ஒரு பருவ காலத்தில், மரமொன்று 40 பழங்களுக்கு மேல் விளைச்சல் தராது.  ஒவ்வொரு வருடமும், இந்த மாம்பழ மரங்கள் விளைச்சலை தருவதும் இல்லை. இது, ருசியாக இருந்தாலும், வர்த்தக ரீதியில் அதில பலன் தரக் கூடியதாக இல்லை. ஒரு பழம் 500 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் போது, அது வளர்ப்போருக்கு லாபம் தருகிறது. கடந்த பருவகாலத்தில், ஒரு மாம்பழம்  ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கோஹிதூர் ரக மாம்பழத்திற்கு, மேற்கு வங்காள அரசு புவிசார் குறியீடு கோரியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்