பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் - போலீசாரை 12 மணி நேரம் அலைக்கழித்த கைதி

மதுரையில் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி, தற்கொலை மிரட்டல் விடுத்து போலீசாரையே கதிகலங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் - போலீசாரை 12 மணி நேரம் அலைக்கழித்த கைதி
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் மறவன்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்களை வைத்து தொழில் நடத்திய சிவராமன், சிவகுமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

கைதான சிவராமன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் முக்கிய குற்றவாளியான துரைராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும், தன்னிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துவிட்டதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் துரைராஜ்.

இந்த சூழலில் 2 நாட்களுக்கு முன் துரைராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவரை மேலூர் கிளைச்சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் சிறை வாசலுக்கு சென்ற போது தான் தற்கொலை செய்து கொள்ள மாத்திரை சாப்பிட்டு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய துரைராஜ், மயக்கம் போட்டு விழுவது போல நடித்துள்ளார். இதனால் பதறிப்போன சிறை நிர்வாகம் அவரை ஏற்க மறுத்தது. பின்னர் மேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்த போது அவர் கூறியது அனைத்துமே பொய் என தெரிந்தாலும் கூட, மேலூர் சிறை நிர்வாகம் துரைராஜை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தது. 

பின்னர் திருமங்கலம் கிளை சிறைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கே திடீரென சுவற்றில் முட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார் துரைராஜ். இதனால் பதறிப் போன சிறை நிர்வாகம் துரைராஜை சிறைக்குள் அடைக்க மறுத்தது. இதுதான் சரியான வழி என கண்டறிந்த துரைராஜ், மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுக்கவே, 12 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் குழம்பித் தவித்தனர். விடிய விடிய காத்திருந்த போலீசார், ஒரு கட்டத்திற்கு மேல் அவரை திருமங்கலம் கிளைச்சிறையில் அடைத்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்தால் தன்னை விட்டுவிடுவார்கள் என நினைத்து மிரட்டல் விடுத்த கைதி, போலீசாரை அலைய விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்